கடந்த மூன்று மாதங்களாய் உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்துகள் கொரோனா வைரஸ், சினிமா உலகத்தையும் ஒரு வழியாக்கி கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா மட்டும் அல்ல, உலக அளவிலான மாற்றமாய் இந்த சக்தியின் பிரதிபலிப்பு இருந்து வந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அட எங்கள் வாழ்க்கையே அழிந்து போகும் ஒரு அவலமிருக்கையில் நீ என்னப்பா சினிமாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் அந்தத் துறையில் இயங்குபவன், அதை சுவாசித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னால் புலம்பாமல் இருக்க முடியவில்லை. நீங்களும் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
சினிமாத்துறை என்பதில் உலகத்தின் மொத்த முதலீடு ஒரு லட்சத்து மூவாயிரத்து நானுற்று ஐம்பது கோடி ரூபாய். 10,344,500,000,00 என்று எண்களில் எழுதலாம். நானே நம்பரை எண்ண முடியாமல் ததக்கபுத்தக்கான்னு ஒரு வழியாய்ட்டேன்
இது ஒரு குத்து மதிப்பான அளவீடுதான். இது இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர்களான முதல் பத்து பேரின் மொத்த அமெரிக்கன் டாலரில் (USD) கணக்கிடப்பட்ட சொத்து மதிப்பாகும்.
அம்பானி (53 பில்லியன்) லட்சுமி மித்தல் (18 பில்லியன்) ஷிவ் நாடர் (16 பில்லியன்) என்று இன்னும் பத்து பேரின் சொத்துக்களை சேர்த்தால் அது உலகெங்கும் தயாராகும் படங்களின் முதலீட்டு மதிப்பாகும். ஒரு உதாரணத்திற்கு சொன்னேன்.
இந்தியாவில் மட்டும் 2018 ஆம் ஆண்டு 1813 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சராசரியாக 1500லிருந்து 2000 இந்தியத் திரைப்படங்கள் ஒரு வருடத்திற்கு தயாரிக்கப்படுகின்றன.
கீழே உள்ள அட்டவணையில் உலக நாடுகள் தயாரிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையை பாருங்கள். இந்தியா இதில் முன்னணியில் இருப்பது நம் மக்களின் ரசனையை மட்டுமல்ல இந்தியர்களில் சினிமா மூலமாக வியாபாரம் செய்ய எத்தனை பேர் புறப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரிகின்றது.
ஆதாரம்: விக்கிபீடியா
சினிமாவும் மனிதர்களும் என்று பார்த்தால் அதிலும் ரசனை வேறுபாடுகள் எவ்வளவு என்பது எல்லோருக்கும் தெரியும். எனக்கு பிடிக்கும் படங்கள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். புத்தகங்கள் மாதிரி, மனிதர்கள் மாதிரி.
அதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால் காலங்கள் மாறினாலும், உலகின் மொத்த பொருளாதாரமே சீர்குலைந்தாலும் பொழுதுபோக்கிற்கென்று நாம் அனைவரும் விரும்பி ரசிக்கக் கூடிய விஷயமாய் உள்ள சினிமா என்றும் வரவேற்க தக்கதாகத்தான் இருக்கும் என்று நாம் நம்பலாம்.
கொரோனா என்ற கிருமியால் சினிமா எப்படி பாதிக்கப்பட்டது என்ற ஒரு கருத்தை மட்டும் பேசலாம். நான் மட்டுமல்ல நீங்களும் சொல்லலாம். இதில் கருத்துபதிவு செய்யுங்கள். செய்யும் முன் யோசித்து அந்த நல்ல சிந்தனையை மட்டும் பதிவு செய்யுங்கள். அது மட்டுமல்ல, கேள்விகள் கேளுங்கள். பதிலை எப்படியாவது பெற்று தருகிறேன். ஆனால் கேட்கும் முன் யோசித்து நல்ல கேள்விகளை கேளுங்கள்.
தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பு / எதிர்காலம்...
இப்போது முக்கிய பிரச்சனைக்கு வருவோம். உலக சினிமாவை விட்டு விட்டு தமிழ் சினிமாத்துறைக்கு வருவோம். இதுவரை சினிமா எடுத்த தயாரிப்பாளர்களில் பெருபாலோனோர் அதை வியாபார ரீதியாகத்தான் எடுத்தார்கள். இனியும் அது அப்படிதான் இருக்கும். ஒரு சிலர் மட்டும் கலையார்வத்துடன், சினிமாவை ஒரு கலை நுட்பத்துடனும் அணுகுகிறார்கள். 80 சதவீத தயாரிப்பாளர்கள் வியாபார நோக்கம் உடையவர்களாகவும், 20 சதவீதம் கலை ஈடுபாட்டுடனும் சினிமாவை எடுக்கின்றனர்.
அப்படிப்பட்ட வியாபார நோக்கில் எடுக்கப்படும் படங்கள் விற்பனை வியூகத்தின் வழியாக வெற்றி பெற்று திரைக்கு வருவது என்பது ஒரு இமாலய முயற்சி. விநியோகம் செய்பவர்கள் அதிகாரத்தின் தயவில்தான் தயாரிப்பாளர்கள் இயங்கவேண்டிய நிலை இருப்பதை இன்றைய தமிழ் சினிமா வட்டாரத்தில் யாவரும் அறிவர்.
பெரிய தயாரிப்பாளர்களை மட்டும் ஆதரித்து இரண்டாம் மட்டத்தில் இரண்டில் இருந்து எட்டு கோடி ரூபாய் வரை செலவு செய்து திரைப்படம் தயாரித்த சில தயாரிப்பாளர்களையும் அதற்கு கீழ் உள்ளவர்களையும் விநியோகம் செய்பவர்கள் ஒரு பொருட்டாக மதிக்காததால் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரை அரங்குகளுக்கு வராமல், தயாரிப்பாளர்கள் முதலீட்டையும் அதில் பணியாற்றிய கலைஞர்களின் ஆர்வத்தையும் உதாசீனம் செய்த கவலைக்கிடமான நிலை தமிழ் சினிமாத்துறையை ஆக்கிரமித்திருப்பது உண்மை.
வியாபாரிகளின் (விநியோகஸ்தர்கள்) கட்டுப்பாட்டிற்குள் ஒரு திரைப்படத்தின் விதி இருக்கும் ஒரு நிலை இருந்துவருகின்ற தமிழ் சினிமா இனி சில நவீன வழிமுறைகளில் ரசிகர்களை சென்றடைய உள்ளது. திரையரங்குகள் வழியாக வந்தால்தான் ஒரு படம் பார்க்கப்படும் என்ற முறை கொரோனா வருகைக்குப் பின் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கஷ்டத்தில்தான் நல்லது பிறக்கும் என்ற கருத்தின் உண்மை சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த சூழ்நிலையில்தான்
OTT (Over The Top) Media Service (இணையதரவு) என்ற ஒரு வழிமுறையில் இன்டர்நெட் டேட்டா மூலம் ஸ்மார்ட் டிவி , செல் போன், கம்ப்யூட்டர் மற்றும் டேப்லெட் வழியாகவும்,
Direct To Home (DTH) நேரடியாக வீட்டிற்கு என்ற முறையிலும் இனி சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய பண்பாடு ஏற்பட்டு வருகின்றது. இது விநியோக கட்டுக்கோப்பில் அதிகாரம் செய்யும் விநியோக அநியாயஸ்தர்களுக்கு ஒரு அதிர்ச்சியை அளிக்கும் விஷயமாய் வந்துள்ளது. சற்றும் எதிர்பாராமல்!
அனால் தயாரிப்பாளர்களிடையே இது ஒரு புது உற்சாகத்தை அளித்துள்ளது. அவர்களின் முதலீடு ஒரு புது முறையில் வருமானமாய் திரும்பி வரும் என்பதும், அந்த திரைப்படங்களுக்கு பின் இருக்கும் படைப்பாளிகளின் ஆக்கத்தையும் மக்களின் பார்வைக்கு அவர்கள் வீடுகளுக்கே அனுப்பிவிடும் என்ற ஒரு எளிய வழிமுறையாக வருவது கொரோனாவிற்கு முன் கிடையாது.
திரையரங்குகளில் படம் பார்ப்பது ஒரு இனிய அனுபவம் என்பதை நாம் மறுக்கவில்லை. படங்கள் திரையரங்குகளுக்கு வரும். ஆனால் அரங்குகளை வந்து சேர்வது, முன்பு இருந்த அளவிற்க்கு ஒரு கடினமான நிலையாய் இருக்காது. மாறாக இப்படி OTT அல்லது DTH வழியாக வந்த சிறு பட்ஜெட் படங்கள் நன்றாக இருந்தால் அவையும் அரங்குகளில் வரும்.
வீடு தேடி வரும் புது திரைப்படங்கள் பல சலுகைகளையும் வசதிகளையும் அளிக்கின்றன.
- ஒரு குடும்பத்தையே அள்ளிக்கொண்டு படம் பார்க்க கஷ்டப்பட்டு போய் , இருக்கிற காசை பாப் கார்ன், சிக்கன் பஃப், ட்ரிங்க்ஸ் என்று செலவு செய்வது மிச்சம்
- அன்றாடம் போக்குவரத்து நெரிசலில் போய் அக்கடான்னு வந்த பின், அப்படியே சாய்ந்து நமக்கு வேண்டிய டைம்ல படத்தை பாக்குற ஒரு வசதி
- நடுத்தரவர்க்கம் மற்றும் எளிமையானவர்கள் இதன் மூலம் தமது வருவாயை நன்கு சேமிக்கலாம். அல்லது வீட்டிற்கு வேண்டியவற்றிற்கு செலவு செய்யலாம்
- இப்படி ஒரு கணிசமான மக்கள் தொகை படங்களை OTT அல்லது DTH மூலமாக பார்ப்பது அணைத்து விதமான தயாரிப்பாளர்களுக்கும் வருவாய் ஈட்டி தருவது ஒரு சிறப்பம்சம்.
- தியேட்டருக்கு போனால்தான் புதுப்படங்களை பார்க்க இயலும் என்ற நிலை மாறி வீட்டிலேயே அல்லது எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், அதுவும் மிக குறைந்த கட்டணத்தில் என்கிற போது அதுவே மிகப்பெரிய வசதியாகிவிடுகின்றது.
என்னிடம் ஒரு நல்ல கதை உள்ளது. எப்படியாவது அதை ஒரு படமாய் எடுக்கவேண்டும் என்ற உத்வேகம் உள்ள கலைஞர்களுக்கு ஒரு நல்ல வழியை இந்த புதிய காட்சி வழிமுறைகள் அமைத்து தரும். இன்றைய தொழில் நுட்ப முன்னேற்றங்களில் ஒரு ஐ-போனையோ, ஆண்ட்ராய்ட் போனையோ வைத்தே தனது கதையை ஒரு படமாய் எடுக்க இயலும். அதை நல்ல முறையில் தரமாய் உருவாக்கி அனைவரையும் சென்றடைய முடியும் என்ற ஒரு நவீன காலகட்டம் உருவாகியுள்ளது. தொழில் நுட்பம், மதி நுட்பம், கலையுணர்வு, கலைஆளுமை என்பதெல்லாம் இன்று நம் கைகளில் உள்ள போன்கள் வழியாக பயிற்சி தர இயலும். ஒரு மாபெரும் ஆசானாக காலம் அளித்த தொழில் நுட்பம், கொரோனா மாற்றிய வெளியீட்டு தளம் அமைத்துள்ளது.
எல்லாம் எளிதாகிவிட்டது என்பதற்க்காக எதை வேண்டுமானாலும் எடுத்து படமாக்கலாம் என்பதை விட்டு விட்டு நம் வீடு, நமது கலாச்சாரம், பண்பாடு . சமுதாயம் என்பவற்றை எண்ணி இன்றும் நாளையும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தரமான படங்களை எடுக்கவேண்டும்.
நான் சொன்னது சரி என்று நான் கூறவில்லை. எனது பார்வையை பதிவு செய்துள்ளேன். எனது கருத்துக்கள் மட்டும் சரியில்லை என்பதை உணர்வேன். தயரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் சொல்லவேண்டும். அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். திரைப்படங்கள் மூலமாக பரிமளிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள கலைஞர்களும் சிந்தியுங்கள். சொல்லுங்கள்.
வலிமையுள்ளவன் பலவீனமாகுவதும், வலுவற்றவன் வலிமையுள்ளவனாவதும் காலத்தின் கட்டாயம். சமத்துவம் என்பதை மறுபடியும் உலகிற்கு சொன்ன ஒரு கடவுளின் துகள்தான் கொரோனா. ஏழை பணக்காரன் என்று பார்க்காமல் போட்டு தாக்கி உயிரை பாதுகாக்க கண்ணுக்கு தெரியாத இந்த துகளிடம் இருந்து எல்லாரும் ஓடி ஒளிந்தது போல் சினிமாத் துறையின் அணுகுமுறையையும் மாற்றியுள்ளது கொரோனா.
இது வரை கி மு அல்லது கி பி என்று போட்டு வந்த நாம் இனி இந்திய சினிமாவை பொறுத்த வரையாவது கொ .மு (கொரோனாவிற்கு முன்) அல்லது கொ .பி (கொரோனாவிற்கு பின்) என்று எழுத வேண்டிய நிலையை கொரோனா கொண்டுவந்த சீர்திருத்தங்கள் ஏற்படுத்தியுள்ளன என்று நம்பலாம்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை ஏங்கேயோ படித்தேன். உணர்கிறேன். Change is inevitable!
மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம் என்னை பண்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த வலைப்பதிவினை
http://transimagenews.blogspot.com/ பதிவிறக்கம் (SUBSCRIBE) செய்ய வேண்டுகிறேன். நன்றி.
Kc